அருவி படத்தில் தன்னையும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் விமரிசனம் செய்ததற்குத் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கிண்டல் அடித்தும் விமரிசனங்கள் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டரில் தனது வருத்தத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ட்வீட் இது:
ஒரு பெண்ணாக, அதுவும் வெளிப்படையாகப் பேசுபவராக, ஊடகத்தில் உள்ளவராக, ஓரளவு வெற்றியடைந்தவராக, பிராமணச் சமூகத்தில் பிறந்து, அதிலும் பாலக்காடு ஐயர் உச்சரிப்பு கொண்டவராகத் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது ஹெச்.ஐ.வியால் பாதிப்படைவதை விடவும் மோசமானது. இந்த வைரஸ் குறித்து யாராவது ஏன் படம் எடுக்கக் கூடாது? இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவர்களை ஏன் கடத்தக்கூடாது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.