15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விதார்த் நாயகனாக நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு' சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா, இப்படை வெல்லும் ஆகிய 13 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் விதார்த் நாயகனாக நடித்த ஒரு கிடாயின் கருணை மனு தேர்வாகி வெற்றியடைந்துள்ளது. 2-வது இடத்தை விக்ரம் வேதா படம் பெற்றது. தேர்வுக்குழுவினரின் சிறப்பு விருது மாநகரம் படத்துக்குக் கிடைத்தது.
ஆட்டை மையமாகக் கொண்டு உருவான படம் "ஒரு கிடாயின் கருணை மனு'. ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில், விதார்த், ரவீனா, ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் நடித்தார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா.