சாதி உணர்வை காயப்படுத்தினாரா? பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்!
மும்பை: குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களின் உணர்வை காயப்படுத்தியதாக பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகியுள்ளது. அதன் பொருட்டு படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அங்கு பேசும்பொழுது குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் சல்மான்கான் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு பெருவாரியாகத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அரசியல் கட்சியினரும் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதேசமயம் சல்மான்கான் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்தேரி போலீஸ் நிலையத்தில் ரோஜ்கர் அகாரி இந்திய குடியரசு கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் குறிப்பிட்ட படம் ஓடும் திரையரங்கங்கள் முன்பு திரண்ட குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் சல்மான்கான் போஸ்டர்களை கிழித்ததுடன், கட்-அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.