மும்பை: சொத்து விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் காரணமாக வீட்டினையிழந்து தவிக்கும் நடிகர் கமலின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி செய்ய முன்வந்துள்ளார்.
நடிகர் கமலின் முன்னாள் மனைவி சரிகா. சுருதிஹாசன், அக்ஷரா ஆகியோரின் தாய். முன்னாள் பாலிவுட் நடிகையான இவருக்கு மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அவர் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய இந்த வீடானது அவரது தாயாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சரிகாவின் தாயார் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதேநேரம் அவர் சரிகா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்பட அவரது பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும், தனது குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவரின் பெயருக்கு உயில் எழுதி வைத்து இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரிகா தற்பொழுது நீதிமன்ற போராட்டத்தில் இருக்கிறார். இதன் காரணமாக அவர் தற்பொழுது தனது வீட்டில் வாசிக்க இயலாத சட்டச் சிக்கல் உள்ளது.
சரிகாவின் இந்த நிலைமை அவரது நெருங்கிய தோழியும் அமீர்கானின் சகோதரியுமான நுஸ்ஷத் மூலம் அமீர்கானின் கவனத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சரிகாவுக்கு உதவ நடிகர் அமீர்கான் முன் வந்துள்ளார்.