கமலின் சபாஷ் நாயுடு படம் ரத்தாகவில்லை! படக்குழு தகவல்

படப்பிடிப்பு நிச்சயம் மீண்டும் ஆரம்பமாகும். கமல் இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை...
கமலின் சபாஷ் நாயுடு படம் ரத்தாகவில்லை! படக்குழு தகவல்

கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படம் ரத்து செய்யப்படவில்லை என்று படக்குழு தகவல் அளித்துள்ளது. 

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் படத்தை தயாரிக்கிறது. கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படம் இது. தந்தை - மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா பணியாற்றி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் படத்தை டி.கே. ராஜீவ் குமார் இயக்கினார். 1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். அடுத்து 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைந்தார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த வருடம் ஜூன் 6 முதல், படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்கியது. இயக்குநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இயக்குநர் பொறுப்பை ஏற்றார் கமல்.

"சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்த நிலையில், தனது அலுவலக மாடியிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார் கமல். கால் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். பூரணமாக குணமாகி வந்ததையடுத்து கடந்த வருட அக்டோபர் மாதம் முதல் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க தீர்மானிக்கப்பட்டது. 

படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கும் அளவுக்கு கமல் முழு அளவில் குணம் அடையவில்லை. எலும்பில் அறுவை சிகிச்சை என்பதால், பூரண குணத்துக்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் டிசம்பர் மாத மத்தியில் படப்பிடிப்பு நடத்த ஆலோசிக்கப்பட்டது. படத்தில் ஏற்றுள்ள பல்ராம் நாயுடு கதாபாத்திர கெட்-அப்புக்காக, மேக்கப் கலைஞர்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட இருந்தார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அவர்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டிய நிலை இருப்பதால், மேக்கப் பிரச்னை எழுந்தது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியிலும் படப்பிடிப்பு தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. 

இப்போது காலவரையின்றி சபாஷ் நாயுடு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவேண்டும் என்றால் அமெரிக்கப் படக்குழுவினர் அனைவருக்கும் விசா வாங்கவேண்டும். அது கிடைக்க எப்படியும் 8 வாரங்கள் வரை ஆகலாம். மேலும் நடிகர்கள் பலரின் கால்ஷீட் கிடைப்பதும் கஷ்டம். பலரும் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார்கள். எனவே இப்போதைக்குப் படப்பிடிப்பு நடைபெறாது என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இப்போது இந்தத் தகவலால் உண்டான குழப்பத்தை அடுத்து படக்குழு தரப்பினர் மேலும் ஒரு தகவல் அளித்துள்ளார்கள். சபாஷ் நாயுடு படம் ரத்தாகவில்லை. படப்பிடிப்பு நிச்சயம் மீண்டும் ஆரம்பமாகும். கமல் இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை. எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதியாகச் சொல்லப்பட முடியாததால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான் என்று படக்குழு உறுதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com