சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் 2.0 படத்தை ரூ.350 கோடிக்கு இன்ஸ்யூரன்ஸ் செய்து படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவிலேயே அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார்.
தற்பொழுது இந்த படத்தை ரூ.350 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் இன்சூரன்ஸ் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 13 நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு மூலம் இந்த இன்ஸ்யூரன்ஸ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல் போன்றவற்றுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும்.
இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. பிற வேலைகள் விரைவாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.