அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள்.
உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்தப் படம் முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்தது. இந்நிலையில் 13 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூல் செய்து சாதனை செய்தது.
இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 17 நாள்களில் தான் ரூ. 300 கோடி வசூலைத் தொட்டது. அதன் சாதனையை டங்கல் முறியடித்தது. முதல் 3 நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலித்த டங்கல், 8 நாள்களில் ரூ. 200 கோடியையும் 13 நாள்களில் ரூ. 300 கோடியையும் வசூல் செய்தது.
டங்கல் படம் நேற்றுடன் (ஞாயிறு) ரூ. 340 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர, சனிக்கிழமை வரை வெளிநாடுகளில் ரூ. 174 கோடி வசூலித்ததன் அடிப்படையில் இதுவரை உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது டங்கல் படம்.
16 நாள்களில் (கடந்த சனிக்கிழமைவரை) இந்த இலக்கை அடைந்துள்ளது. மேலும் இன்றுடன் இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடி வசூலித்த படம் என்கிற சாதனையையும் செய்யவுள்ளது.