ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அந்தச் சங்கம் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5,000 ஆண்டுகளாக தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர். பொறுத்தது போதும் என்று இன்று இதற்கு நிரந்தர தீர்வுக்காண தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளனர். குறிப்பாக மண்ணின் மைந்தர்கள், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது இன உணர்வை வெளிப்படுத்த தமிழகமெங்கும் களமிறங்கி போராடி வருகிறார்கள். 1965-இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டு மாறி உள்ளது. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜன.20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நடிகர் சங்க வளாகத்தில் மெளன அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் போராட்டமே முக்கியம். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய போராட்டத்தில் அஜித், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகர்களும் கலந்துகொண்டுள்ளார்கள்.