நான் பார்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம் என்று கமல் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் குறித்து நடிகர் கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். ராட்டையைச் சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல். நான் டிவி செய்தியைப் பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.