அமைதியான போராட்டத்தின் காரணமாக உலகுக்கே வழிக்காட்டியாக மாறி விட்டீர்கள் என்று தமிழ் இளைஞர்களின் எழுச்சிக்கு இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜா இணையத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவு:
மாணவர்களே.. இளைஞர்களே... இந்த உலகத்துக்கே வழிகாட்டும் முறையாக இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான, ஒரு தலைவன் இல்லாமல், ஒரு கட்சியின் துணையில்லாமல், வேறு எந்த ஒரு இயக்கத்தின் ஆதரவுமில்லாமல், ஆதரவையும் நாடாமல், யாரும் வரக் கூடாது என தடை செய்துவிட்டு நீங்களாக நடத்துவது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை காட்டுகிறது.
இந்தத் தன்னம்பிக்கையை, அமைதியான போராட்ட வழியை இந்த உலகம் கண்டிப்பாக பின்பற்றப் போகிறது. உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள். அவ்வளவு உத்வேகமும், உணர்ச்சியும், உள்ளுணர்வும் உங்களுக்குள் இத்தனை நாள் வரை அடங்கிக் கிடந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இது தொடரட்டும். இடையிலே புகுந்து சில அரசியல் கட்சிகள், சில தலைவர்கள், சில அமைப்புகள் இதில் ஆதாயம் தேடப் பார்த்தார்கள். அதெல்லாம் பலிக்கவில்லை. பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள். உங்களுடைய ஒற்றுமை, உணர்விலே ஒன்றியிருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிட்டும். இடையில் யார் புகுந்தும், நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்வதற்கு வழியே கிடையாது. பெரிய சாதனை செய்துள்ளீர்கள் என்று நான் நினைத்து மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இளையராஜா.