இன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமை என்று யாரும் இல்லாததால் போராட்டத்தில் வெவ்வேறு கோரிக்கைகள் உண்டாகின. போராட்டக் குழுவினர் அரசியல் கட்சிகளைத் தவிர்த்தாலும் என்னுடைய வேண்டுகோள் ஒன்று. இதுபோன்ற போராட்டத்தின்போது அரசியல் கட்சிகள் போராட்டக்காரர்களை வழிநடத்தவேண்டும்.
தலைமையில்லாததால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. 7 நாள்களாக மாணவர்கள் எல்லோரும் கண்ணியமாக நடந்துகொண்டார்கள். அவர்களின் பாதுகாப்பு முக்கியம். அவர்களுடைய பெற்றோர் பயப்படுவார்கள். எனவே எல்லோரையும் காவல்துறை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றார்.