தமிழ்த் திரை உலகின் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தவர்: கவிஞர் வைரமுத்து

தமிழ்த் திரையுலக மூட நம்பிக்கைகளை உடைத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
தமிழ்த் திரை உலகின் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தவர்: கவிஞர் வைரமுத்து

தமிழ்த் திரையுலக மூட நம்பிக்கைகளை உடைத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியது :
பாலசந்தரை ரசித்தவன், அவரோடு பணியாற்றியவன், அவரது ஆளுமையால் கவரப்பட்டவன், அவரால் வளர்க்கப்பட்டவன் என்ற நன்றியின் அடிப்படையில் இந்தச் சிலையை நிறுவியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்தச் சிலை,  பாலசந்தர் என்ற பெருமகனுக்கான மரியாதைக்காக மாத்திரமல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிராமத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர், குடியரசுத் தலைவரிடமிருந்து தாதா சாகேப் பால்கே விருது பெறுமளவு உயர முடியும் என்பதை உணர்த்தவே இந்தச் சிலை.
86 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு ஒரு குழந்தை பிறந்த போது, தலைக்கு மேலே உள்ள நட்சத்திரம் அறிந்திருக்காது} தமிழ் சினிமாவுக்கு ஒரு மாற்று சினிமா தர வந்த ஒரு மகா கலைஞன் இங்கே பிறந்திருக்கிறான் என்று.
 உறவினர்கள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்} தாதா சாகேப் பால்கே விருது பெற உள்ள பிள்ளை பிறந்திருக்கிறது என்று.  கலை உலகம் அறிந்திருக்காது } ரஜினி, கமல் போன்ற கலைஞர்களை தமிழ் மண்ணுக்குத் தரப்போகும் மகா கலைஞன் பிறந்திருக்கிறான் என்று.  காற்று அறிந்திருக்காது இந்த இடத்தில் தான் கலையாக வந்தவர் சிலையாகப் போகிறார் என்று.
பாலசந்தர் 101 படங்கள் செய்துள்ளார். அதில், முதல் படத்துக்கும், கடைசி படத்துக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியமளிக்கிறது. முதல் படம் } நீர்க்குமிழி. கடைசி படம் } பொய். இந்த உடல் நீர்க்குமிழி போன்றது, உடைந்து போகும், மரணம் நிச்சயம் என்பதையே உணர்த்துகிறது. எனவே, மூப்பு இல்லாத  சிலையாகுமாறு வாழ்ந்திட வேண்டும் என்பதே அவர் நமக்குத் தந்துள்ள செய்தி. அவரது கடைசி படம்}  பொய். பொய்யிலிருந்து மெய்யைக் கண்டுபிடிப்பவன் கலைஞன். இந்த பிரபஞ்சம் மாயாலோகம் என்றால் மாயாலோகத்தில் எதார்த்தம் எது என்பதைக் கண்டறிபவன் கலைஞன்.
அந்த வகையில் பாலசந்தர் மகா கலைஞன்.  திரைத்துறையில் வெற்றி பெறுவது என்பது புல்லின் மீது நடந்து சென்று பூ பறிப்பது அல்ல.  முள்ளின் மீது நடந்து சென்று தேன் எடுப்பதை போன்றது. பாலசந்தர் திரை உலகுக்கு வந்த போது நிறுவனங்கள் தான் திரையுலகை ஆண்டன.
அடுத்ததாக நடிகர்களின் ஆதிக்கம், இயக்குநர்களின் ஆதிக்கம், தயாரிப்பாளர்களின்ஆதிக்கம் என அடுக்கடுக்கான ஆதிக்கங்கள் இருந்த காலம்.   தயாரிப்பு என்ற கோட்டையை உடைத்து, நிறுவனங்கள் என்ற எல்லையைத் தாண்டி, நடிகர்கள் என்ற ஒரு பெரும் சுவரைத் தாண்டி,  நட்சத்திர ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி ஒருவர் புகழ்கொடி நாட்டியுள்ளார் என்றால் அது சாதனையின் சிகரம்.
திரைத் துறையில் மூடநம்பிக்கையை உடைத்த முன்னோடி அவர். தனது முதல் படத்துக்கு அவர் வைத்த பெயர் நீர்க்குமிழி. இலை விழுந்தால், அலை மோதினால், மூச்சுப்பட்டால், காற்றுத் தட்டினால் உடைந்து போகக் கூடியதும் உலகிலேயே தாற்காலிகமானதுமான நீர்க்குமிழியை தன் படத்துக்குத் தலைப்பாக வைக்கும் துணிச்சல் அந்த மகா கலைஞனுக்கு இருந்தது.
விளிம்பு நிலை மனிதர்கள், மறுக்கப்பட்ட  பாத்திரங்கள், வெளிச்சம் விழாத வீடுகளில் விழுந்து, விரிந்து பரந்த மகா கலைஞன் கே. பாலசந்தர் என்றார் கவிஞர் வைரமுத்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com