மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகர் திலீப் நீக்கம்!

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில்..
மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகர் திலீப் நீக்கம்!

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கொச்சி அருகே நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு கடந்த பிப்ரவரி மாதம் திரும்பிக் கொண்டிருந்தார் பிரபல நடிகை. அப்போது அங்கு காரில் வந்த நபர்கள், அவரை கடத்திச் சென்றனர். பல மணி நேரமாக காரில் வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்த நபர்கள், பின்னர் நடிகையை இறக்கிவிட்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த காரின் ஓட்டுநர் மார்டின் அந்தோணியைக் கைது செய்தனர். பிறகு, அவர் அளித்த தகவலின்பேரில் பல்சர் சுனி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துக்காக தனக்கு ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டார். மேலும், நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், 14 நாள் நீதிமன்றக் காவலில் அலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக இருக்கும் திலீப்பின் 2-வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனைக் காவல்துறை தேடிவருகிறது.

நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கப் பதவியிலிருந்து திலீப்பை நீக்குவது குறித்து நடிகர் மம்மூட்டி வீட்டில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பாவனா விவகாரத்தில் கைதான தீலீப் கேரள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் திலீப் உறுப்பினராக உள்ள இதர திரைப்பட சங்கங்களிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com