மகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: நடிகை காயத்ரி ரகுராமின் தாய் பேட்டி

மகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: நடிகை காயத்ரி ரகுராமின் தாய் பேட்டி

இந்தளவுக்கு இழிவுபடுத்தக் கூடாது. அவர் பாஜக-வில் உள்ளதால் விமரிசனம் செய்கிறார்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் தவறாகப் பேசியதற்குத் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நடிகை காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்குக் கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் காயத்ரி ரகுராமுக்கும் விஜய் டிவிக்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் எவிடன்ஸ் கதிர், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக முடிவெடுத்துள்ளார். இதுதவிர, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடமும் இதுபோன்ற ஒரு மனுவை தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் அளித்துள்ளார்கள். இந்த விவகாரத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் காயத்ரி ரகுராமுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என் மகள் மீது அதிக விமரிசனங்கள் எழுந்துள்ளன. ஒரு பெண்ணை இந்தளவுக்கு இழிவுபடுத்தக்கூடாது. பாஜக-வில் உள்ளதால் விமரிசனம் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. இதனால் நான் மனவேதனை அடைகிறேன். ஒரு தாயின் மனவருத்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். என் மகளின் பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com