வராத கூட்டம்: நிலைமையை மாற்றுமா விக்ரம் வேதா?

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் அவர்களுக்கு அழுத்தம் தந்துகொண்டிருப்பதால் பலரும் திரைப்படங்களுக்குச் செல்வதை...
வராத கூட்டம்: நிலைமையை மாற்றுமா விக்ரம் வேதா?

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் சமீபத்தில் மூடப்பட்டன. கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்தன.

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும். ஜிஎஸ்டி வரியை ரூ. 120 உடன் சேர்ப்பதால் மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன திரையரங்குகள்.

இந்தத் திடீர் விலையேற்றம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் அவர்களுக்கு அழுத்தம் தந்துகொண்டிருப்பதால் பலரும் திரைப்படங்களுக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டார்கள். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக வார இறுதி நாள்களில் கூட திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை. சனி, ஞாயிறு கிழமைகளில் வழக்கமான கூட்டத்தை விடவும் 40% குறைவாகவே பார்வையாளர்களின் வருகை உள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகினர் கலக்கத்தில் உள்ளார்கள். இந்த நிலை நீடித்தால் அது தமிழ்த் திரையுலகை வெகுவாகப் பாதிக்கும் என்று எண்ணுகிறார்கள்.

பெரிய நடிகர்களின் படம் வெளியாகும்போது ரசிகர்கள் விலையேற்றத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதே பலருடைய நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த வாரம் வெள்ளியன்று வெளியாகும் விக்ரம் வேதா படம் ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

இந்த வாரம் வெளியாகும் இந்தப் படத்துக்கு வழக்கமான பெரிய நடிகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு கிடைக்கும் என திரையுலகினர் நம்புகிறார்கள். அதிலும் விஜய் சேதுபதி படங்களுக்குப் பொதுவாக நல்ல ஓபனிங் இருக்கும். இது ஆக்‌ஷன் வகைப் படமென்பதால் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூல் கிடைக்கும், டிக்கெட் கட்டணத்தின் விலையேற்றம் வசூலைப் பாதிக்காது என்றும் அறியப்படுகிறது. இந்தப் படத்திலிருந்து வழக்கமான நிலை திரும்பும் என்றும் திரையரங்கு அதிபர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

பார்க்கலாம், விக்ரம் வேதா படம் என்ன மாதிரியான முடிவுகளையும் ஆச்சர்யங்களையும் தரப்போகிறது என்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com