படப்பிடிப்பில் காயம் அடைந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்!

சண்டைக் காட்சியில் நடித்தபோது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு காயம் ஏற்பட்டு நெற்றியில்
படப்பிடிப்பில் காயம் அடைந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்!

சண்டைக் காட்சியில் நடித்தபோது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு காயம் ஏற்பட்டு நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது. இந்தச் சண்டைக் காட்சி ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் 'மணிகர்னிகா’ என்ற பெயரில் திரையாக்கம் பெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கங்கனா வாள் சண்டை போடும் காட்சிகள் சில உள்ளன. இக்கதாபாத்திரத்தில் மிகவும் ஆர்வமாக நடித்து வரும் கங்கனா, சண்டைக் காட்சிகளில் தனக்கு டூப் தேவையில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

இத்திரைப்படத்துக்காக சமீபத்தில் ஆக்ரோஷமான வாள் சண்டையொன்று ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கம் செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக கங்கனாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மணிகர்னிகா படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் இது பற்றிக் கூறுகையில், 'நிஹார் பாண்டியாவும் கங்கனாவும் வாள் சண்டை புரிவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். நிஹார் வேகமாக வாளை வீச, அப்போது கங்கனா அதிலிருந்து தப்பிக்க வேண்டும். ஆனால் கங்கனாவின் அந்த ஒரு நொடி பிசகாகிவிட்டது. அவர் செயலற்று இருந்துவிட்டதால், நிஹார் வீசிய வாள் சரியாக கங்கனாவின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டுவிட்டது. காயம் சற்று ஆழமாக இருந்ததால் நாங்கள் உடனடியாக கங்கனாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தோம்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘நெற்றியில் வாள் பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த போதும், மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலும் கங்கனா தைரியமாகவே இருந்தார். தன்னால் தான் கங்கனாவுக்கு இப்படியாகிவிட்டது என்று குற்றவுணர்விலும் வருத்தத்திலும் இருந்த நிஹாரையும் கங்கனா சமாதானப்படுத்தினார்’ என்றார்

ஐசிசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட கங்கனாவின் நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது. கத்தி புருவத்துக்கு இடையே கிட்டத்தட்ட எலும்பு வரை பாய்ந்துள்ளதால் கங்கனா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் கங்கனா. மூன்று வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர்.

கங்கனா கூறுகையில், ’காயம் ஆறியதும் படப்பிடிப்பை தொடர்வேன், ஜான்சி ராணி ஒரு வீர மங்கை. இதைப் போல எத்தனையோ காயங்கள் பெற்றிருப்பார். அதனால் நானும் நெற்றியில் தழும்புடனே மீதிப் படத்தில் தோன்றுவேன் ’ என்றார். 

க்ருஷ் இயக்கிக் கொண்டிருக்கும் மணிகர்னிகாவே மற்ற இயக்குனர்களின் படத்தில் கதாநாயகியாக தான் நடிக்கும் கடைசி படம் என்று கூறியுள்ளார் கங்கனா. அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். ‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு இறுதியில் என்னுடைய படத்தின் வேலைகள் தொடங்கிவிடுவேன். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். இது முதியவர்களைப் பற்றிய படம். முதல் முறையாக நான் 80 வயது பெண்ணாக நடிக்கிறேன். இதில் தனது வயதைப்பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணாக நான் நடிக்கிறேன்’என்று மீடியாவிடம் தெரிவித்துள்ளார்.

இனி கங்கனா தான் இயக்கும் படங்களில் மட்டுமே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. துணிச்சலான இந்த 'க்வீன்' எது சொன்னாலும் அது பரபரப்பான செய்தி ஆகிவிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com