விளம்பர நோக்கத்திலேயே 'காலா' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது: ரஜினிகாந்த், பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் மனு

விளம்பர நோக்கத்துடனே 'காலா' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்

விளம்பர நோக்கத்துடனே 'காலா' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4-ஆவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித், உண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பதிலளிக்க இரண்டு முறை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி எம்.இளங்கோவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வோண்டர்பார் பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'காலா' படத்தின் கதையை யாரிடம் இருந்தும் திருடவில்லை. மனுதாரர், கரிகாலன் என்ற பெயரில், தனது கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார்.
ஒரு படத்தின் கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலோ அல்லது தமிழ்நாடு படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ பதிவு செய்திருந்தால், ஒரு ஆண்டுக்குள் அந்த தலைப்பில் படம் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, தலைப்பின் பதிவை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், படத்தின் தலைப்பு தானாகவே காலாவதியாகி விடும்.
கரிகாலன் என்ற தலைப்பை மனுதாரர் கடந்த 1996-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பின்பு கரிகாலன் என்ற தலைப்பின் பதிவை மனுதாரர் புதுப்பிக்கவில்லை.
எனவே, இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. நடிகர் ரஜினிகாந்தை 1991-1992-ஆம் ஆண்டில் சந்தித்து கரிகாலன் படத்தின் கதையை தெரிவித்ததாக மனுதாரர் கூறி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் ஆகும்.
மேலும் அவர் மனுதாரரை பார்த்ததில்லை. சுமார் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்தப்படம் அடுத்த ஆண்டு (2018) கோடை காலத்தில் (ஏப்ரல் அல்லது மே மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிரபலமான நடிகர்கள் நடிக்கும் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தால் பிரபலம் ஆகலாம் என்ற விளம்பர நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு அபராதம் விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com