விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களுக்குப் பிறகு தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக கமல் கூறியுள்ளார்.
இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் கூறியதாவது: விஸ்வரூபம் 2 முதலில் வரவேண்டும். அடுத்தது சபாஷ் நாயுடு. என் அடுத்தப் படத்தின் தலைப்பைச் சொன்னால் இப்போது உள்ள சூழலை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அந்தத் தலைப்பை நாலைந்து வருடங்களுக்கு முன்பே பதிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆமாம்.என் அடுத்தப் படம் - தலைவன் இருக்கிறான்.
கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. விஸ்வரூபம் 2 இந்த வருடம் வெளிவரவுள்ளது.
தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களுள் பரவலான வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரம் பல்ராம் நாயுடு. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து "சபாஷ் நாயுடு' என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார் கமல்ஹாசன். கமல்ஹாசனோடு அவரது மகள் ஸ்ருதிஹாசன் முதன் முறையாக இப்படத்தில் தந்தையுடன் இணைந்து நடிக்கிறார். பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் படத்தின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கால் எலும்பு முறிவு விபத்தில் சிக்கினார் கமல்ஹாசன். அறுவை சிகிச்சை முடிந்து சுமார் 7 மாதங்கள் வரை பூரண ஓய்வில் இருந்து வந்த கமல்ஹாசன், இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். ஆனாலும், ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.