தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று தேர்தல் நடைபெற்றது.
சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இத்தேர்தலுக்கு முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராகச் செயல்பட்டார். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.
கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்தத் தேர்தலையும் சந்தித்தது. புது வசந்தம் என்ற பெயரில் இத்தேர்தலைச் சந்திக்கவுள்ள அந்த அணியில் விக்ரமன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி போட்டியிட்டார். பொருளாளர் பதவிக்கு பேரரசு போட்டியிட்டார். துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் இருவரும் போட்டியிட்டார்கள். ஜெகதீஷ் தலைமையில் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.
இதில் இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்று இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.