அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் இன்று ரூ. 1000 கோடி வசூலை அடையவுள்ளது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் மகத்தான சாதனை செய்துவருகிறது.
அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் சீனாவில் வெளியானது.
சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், இதுவரை ரூ. 942 கோடி சம்பாதித்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்யவுள்ளது.
நேற்றுடன் சீனாவில் மட்டும் ரூ. 992 கோடி வசூலித்துள்ளது டங்கல் படம். இந்நிலையில், இந்தப் படம் சீனாவில் இன்று ரூ. 1000 கோடி வசூலை அடையவுள்ளது.
பாகுபலி 2-வின் வசூலைத் தாண்டி அதிக வசூல் கண்ட இந்தியப் படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ள டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தவுள்ளது.