இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டிருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க முடியாது. அந்தளவுக்குத் திரையுலகுக்குச் சலுகைகள் வழங்கியுள்ளது தமிழக அரசு. ஆனால் ஜிஎஸ்டி வரிவிவகாரம் தொடர்பான அறிவிப்பில் கேரளா முந்திக்கொண்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வகைசெய்யும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வரவிருப்பதால் கேரளாவில் பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணத்தில் 25% பொழுதுபோக்கு வரி தற்போது அமலில் உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் இரட்டை வரி வசூலிக்கவேண்டிய நிலைமை உண்டாகும். எஎனவே பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்படுவதாக கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் அறிவித்துள்ளார். அமைச்சரும் மலையாளத் திரையுலகினரும் கலந்துகொண்ட கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு வரி மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனால் உண்டாகும் நஷ்டத்தை இழப்பீடாக அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகம் வருடத்துக்கு ரூ. 500 கோடி வருமானம் கொண்டதாக உள்ளது. சராசரியாக ரூ. 4 கோடி செலவில் வருடத்துக்கு 130 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. கேரள அரசின் இந்த அறிவிப்பை திரையுலகச் சங்கங்கள் வரவேற்றுள்ளன.