பத்திரிகையாளர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகம் தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சஞ்சய் பாரு அவருடைய ஊடக ஆலோசகராக இருந்தார். அப்போது பார்த்த, கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது.
மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பதால் பிரதமரையும் பிரதமரின் அலுவலகச் செயல்பாடுகளையும் நேரடியாகக் கண்டு அதன்படி நிகழ்வுகளை விவரித்துள்ளார் சஞ்சய பாரு. மன்மோகன் சிங் தனது ஆட்சியை எப்படிக் கையாண்டார்? முக்கியமான பிரச்னைகளின்போது எவ்வாறு செயல்பட்டார் என்கிற பல முக்கியமான தகவல்களைக் கொண்ட புத்தகம் அது. இது தமிழில், தற்செயல் பிரதமர் என்கிற பெயரிலும் வெளிவந்துள்ளது.
புத்தகம் வெளியான பிறகு பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகவுள்ளது. புத்தகத்தின் தலைப்பையே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அனுபம் கெர், மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அன்சல் மேத்தாவின் திரைக்கதையை முன்வைத்து விஜய் ரத்னாகர் குட்டே இயக்கவுள்ளார். அடுத்த வருடம் டிசம்பரில் இந்தப் படம் வெளிவரவுள்ளது.