பெரிய, சிறிய பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்வது என்பது சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் அறிக்கை:
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ஜூலை 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றபோதும், பல வகையில் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. ஹோட்டல்களுக்கு 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
திரைப்படங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, தங்கல் போன்ற பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களைப் பெரிதும் பாதிக்கும். திருட்டு விசிடி, ஆன்லைனில் திரைப்படம் வெளியீடு போன்ற காரணங்களால் ஏற்கெனவே திரைப்படத் தொழில் முடங்கி வருகிறது. இந்நிலையில் அதிகபட்ச வரி விதிப்பு என்பது, இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை, அதனை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளும். எனவே, வரி விதிப்பு விவகாரத்தில் தெளிவான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.