ஜி.எஸ்.டி. வரி விதிப்பதன் மூலம் தென் பிராந்திய மொழி திரைப்படங்களை அழிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என லட்சிய திமுக தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை, குனியமுத்தூரில் லட்சிய திமுக கட்சியின் மாவட்ட அலுவலகத்தைத் திறக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் தவிர வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பதன் மூலமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி திரைப்படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக திரைப்படம் எடுத்த அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது சென்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அனைத்து வகை உணவுப் பொருள்களும் கலப்படத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதே போலத்தான் பிளாஸ்டிக் அரிசி, முட்டை ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து, மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்றார்.