ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குத் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குப் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைக் கொள்முதல் செய்து வந்த தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் மீது அம்மாநில பசுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
வேலை இல்லாதவர்கள் செய்கிற காரியம் இது. அவர்களுக்கு வேலை என ஒன்று இருந்திருந்தால் இதைச் செய்ய நேரமிருக்காது. இல்லையெனில் இது அவர்களுக்கு இடப்பட்ட பணியாக இருக்கவேண்டும், இதெற்கென அவர்களுக்குத் தனிஊதியம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். லூசுப்பசங்க... என்று காட்டமாக விமரிசனம் செய்துள்ளார்.