அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுத்தப் பின் தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு தொடர்ந்து 10 நாள்கள் தங்கி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி தமிழக விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்தார். இந்த சந்திப்புகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களை மேலும் அதிகப்படுத்தியது.
இந்நிலையில் வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள காலா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன்.22) மும்பை புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
5 நாள் படப்பிடிப்புக்காக மும்பை செல்கிறேன். நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் உங்கள் (பத்திரிக்கையாளர்கள்) கேள்விக்கு பதில் சொல்வேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது தெரிவிப்பேன். அரசியலுக்கு வருவது குறித்து நண்பர்களுடன் ஆலோசித்தது உண்மைதான். செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார் ரஜினிகாந்த்.