ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கியுள்ளது லைக்கா நிறுவனம். இப்படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் அறிவித்துள்ளார்.
ரஜினி - ஷங்கரின் 2.0 படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்தப் படம் ஜனவரி 25 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.