தமிழ் சினிமா உலகிலும், தமிழக அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகள் திரைப்படமாக உருவாகவுள்ளது.
தமிழக மக்களின் குறிப்பாக ஏழை எளிய மக்களின் இதயங்களில் இன்றளவும் நீக்கமற நிறைந்துள்ள எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பலவிதமான ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ஒன்று. அந்த சம்பவங்களை ரசிகர்களுக்கு முன் வைக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளமையில் நாடக நடிகராக இருந்த போதே, அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். திரைத்துறையில் உச்ச நிலைக்கு வளர்ந்து வந்த பின், அரசியலில் தவிர்க்க முடியாத மக்கள் சக்தியாக எம்.ஜி.ஆர் உருவாகி வளர்ந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவின் செயல்பாடுகளில் ஓவ்வாமை கொண்டு, அதிலிருந்து விலகி அதிமுக எனும் கட்சியைத் தொடங்கி, தன் வாழ்வில் யாரும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாக திகழ்ந்தார்.
அவர் திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் சந்தித்த சோதனைகள், சவால்கள், சூழ்ச்சிகள் பல. அதை அறிந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையாக தொகுக்கப்பட்டுள்ளது.
எவ்வித சமரசமுமின்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் இதில் இடம்பெறவுள்ளன. இப்படத்துக்காக உருவ ஒற்றுமையுள்ள அந்தக் காலக் கட்ட மனித முகங்களின் தேர்வு நடந்து வருகின்றன. தமிழ்த் திரையுலகின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை முன் வைத்து உருவான காமராஜ் படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.