சென்னை: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா'படத்தின்முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கபாலி வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் 'காலா' திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு சென்று, அங்கு தாதாவாக வாழ்ந்த ஒருவரின் கதை என்று சொல்லப்படும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது கடந்த ஒரு மாதமாக மும்பையின் தாராவி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.முதலில் 12 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அதன் பிறகு சென்னை திரும்பினார். சிறிது நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்புகிறது. இது தொடர்பாக படக்குழுவினைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, 'மும்பையில் படமாக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பு என்பதால், அங்கு சேரும் கூட்டத்தினை கட்டுப்படுத்தி காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அத்துடன் படமாகும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் அபாயமும் இருந்தது என்று தெரிவித்தார்.
சென்னை திரும்பியதும் சிறிய ஓய்வுக்குப் பிறகு இங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக பூந்தமல்லி அருகே மும்பையின் தாராவி போன்றே செட்டுகள் மிகுந்த பொருட்ச்செலவில் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.