ஜூலை 1 முதல் சினிமா டிக்கெட் விலை எவ்வளவு?

ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால்...
ஜூலை 1 முதல் சினிமா டிக்கெட் விலை எவ்வளவு?

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்சுலின் மருந்து, நூறு ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் உள்ளிட்ட 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

இந்நிலையில் ஜிஎஸ்டியால் ஜூலை 1 முதல் தமிழகத் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயரவுள்ளது. டிக்கெட் விலை + 28% ஜிஎஸ்டி. அதாவது இனி ரூ. 120 டிக்கெட் ரூ. 153.60 ஆக விற்கப்படும். திரையரங்குகள் இந்தக் கட்டணத்தை ரூ. 150 என்றும்கூட மாற்றிக்கொள்ளலாம்.  

டிக்கெட் கட்டண உயர்வு குறித்த முடிவு சென்னையில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ரூ.120 டிக்கெட்டுகள் தற்போது ரூ.100 ஆகக் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பதிலாக, ரூ. 120 டிக்கெட்டுகள் இனி ரூ. 153.60-க்கு விற்கப்பட்டால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை மிகவும் குறையும் என்றும் அஞ்சப்படுகிறது. சில திரையங்குகளில் ரூ. 100-க்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அவை இனி ரூ. 120-க்கு விற்கப்படும். 

மேலும் தற்போது திரையரங்குகள் 30% நகராட்சி வரி செலுத்திவருகிறது. அவை ரத்தானால் மட்டுமே இந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கமுடியும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ரத்து செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com