தமிழ் திரையுலகில் பாட்ஷா மட்டுமல்ல பாட்ஷா அம்மாவும் ரீ எண்ட்ரி!

நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, மகன், மகளோடு சில மாதங்கள் தங்கி வரலாம் என்று வெளிநாட்டுக்குப் போனதில், இங்குள்ள இயக்குனர்கள் நான் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாக நினைத்து விட்டார்கள்.
தமிழ் திரையுலகில் பாட்ஷா மட்டுமல்ல பாட்ஷா அம்மாவும் ரீ எண்ட்ரி!

நடிகை சத்யப் ப்ரியாவை நினைவிருக்கிறதா? 

'ரோஜா' படத்தில் அரவிந்த் ஸ்வாமியின் அம்மாவாக நடித்திருப்பாரே... அவரே தான்! ரோஜா மட்டுமல்ல, பாட்ஷாவில் ரஜினியின் அம்மா, பணக்காரனில் ரஜினிக்குச் சித்தி, அதற்கெல்லாம் முன்பு ஸ்ரீதேவியும், கமலும் நடித்து 80 களில் வெளிவந்த ஒரு படத்தில் கமலுக்கு ஜோடி இவர் தான். அதற்குப் பின்பு பல தமிழ் படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் இவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

நடுவில் வில்லியாகவும் பல படங்களில் நடித்தார். நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கான வாசலைத் திறந்து வைத்தவர் இயக்குநர் கம் நடிகர் ஆர்.பார்த்திபன். இவரது ‘புதிய பாதை திரைப்படம் தான் சத்தியப்ரியா நடித்த முதல் நெகடிவ் கதாபாத்திரம். அதற்குப் பின் பல திரைப்படங்களில் அம்மா ரோல்களிலும், வில்லி ரோல்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான திரைமுகமாக இருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் வெளியான கோலங்கள் டெலி சீரியலில் நாயகி அபியின் அம்மா சத்யப்ரியா தான். கோலங்களைத் தொடர்ந்து முத்தாரம் உள்ளிட்ட மேலும் சில சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர் தான்.

அட! அவருக்கு என்ன ஆச்சு என்கிறீர்களா?

அவருக்கு ஒன்றுமில்லை. இடையில் இரண்டு வருடங்கள் அவரை வெள்ளித் திரை, சின்னத்திரை அல்லது பிறமொழித்திரைகள் எதிலுமே காணவில்லையே! எங்கே போய்விட்டார் என்று தேடினால் ஃப்ரெஷ் பாட்டியாக ஜம்மென்று திரும்பி வந்திருக்கிறார். இடையில் அமெரிக்காவில் செட்டிலான தனது மகன் மற்றும் மகளது வீட்டில் பேரன், பேத்திகளுடன் தங்கி ஓய்வெடுத்து விட்டு இப்போது மறுபடியும் செல்வா இயக்க அரவிந்த் ஸ்வாமி நாயகனாக நடிக்கும் ‘வணங்கா முடி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக திரும்ப வந்திருக்கிறார்.

எங்கே காணாமல் போனீர்கள்? என்று கேட்டால்;

நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, மகன், மகளோடு சில மாதங்கள் தங்கி வரலாம் என்று வெளிநாட்டுக்குப் போனதில், இங்குள்ள இயக்குனர்கள் நான் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாக நினைத்து விட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை எனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதனால் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகியாச்சு என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து;

சத்யப்ரியா திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானது தமிழிலோ, தெலுங்கிலோ அல்ல; தனது 18 வயதில் ஹிந்தியில்  ‘பாலக் துருவ்’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் சிறுவன் துருவனின் வில்லத்தனமான சித்தியாக நடித்தார் சத்யப்ரியா. அந்தப் படம் முடிந்த பிறகு கல்லூரிப் படிப்பை முடிக்க அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். ஆனால் கல்லூரிப் படிப்பை முழுதாகத் தொடர முடியாமல் சினிமா வாய்ப்புகள் வந்து குவியவே படிப்பை விட வேண்டியதாயிற்றாம். தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம், ‘மஞ்சள் முகமே வருக’ அதில் விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். தனது திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டவர். மீண்டும் ரீ எண்ட்ரி ஆன படம் தான் ஆர். பார்த்திபனின் ‘புதிய பாதை’ 

அப்படிப் பார்த்தால் இப்போது சத்யப் ப்ரியாவுக்கு இது இரண்டாவது ரீ எண்ட்ரி.

25 வருடங்களுக்கு முன் ரோஜா படத்தில் அர்விந்த் ஸ்வாமியின் அம்மாவாக நடித்தவர், அதன் பின் இப்போது தான் மீண்டும் அவரோடு இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ஏற்கவிருப்பது அம்மா வேடமா? பாட்டி வேடமா? என்பது குறித்து செய்திகள் இல்லை. ஆனால் சத்ய ப்ரியா எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பில் அசத்த தயாராகவே இருக்கிறாராம். ஆச்சி மனோரமா இறந்த பிறகு அவர் நடித்ததைப் போன்ற நகைச்சுவை உணர்வு மிக்க புத்திசாலி பாட்டி வேடங்களில் நடிக்கவும் தான் ஆர்வமாக இருப்பதாக சத்யப்ரியா தெரிவித்திருக்கிறார். 

வாங்க பாட்ஷாம்மா... வாங்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com