பிரபல பாலிவுட் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான கரண் ஜோகர் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பாவானது தான் இப்போதைய பாலிவுட் வைரல். தனது நண்பர் கரண் ஒற்றைப் பெற்றோர் (single parent) முறையில் வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்டதை பாராட்டி, பெருமிதத்துடன் ஷாருக்கான் நேற்று வாழ்த்தி இருந்தார். வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இவ்விஷயம் கரணின் பெர்சனல் விசயம் என்றும் அதை அதற்குரிய மரியாதையோடு அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஷாருக் சொல்வதை மக்கள் உடனே ஒத்துக் கொண்டு விடுவார்களா? அதிலும் அரசியல்வாதிகள்! இதோ சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான ‘அபு ஆஷிம் அஸ்மி’ கரண் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விசயத்தை ‘இதென்ன நாடகம்?!’ எனக் குறிபிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கரண் அப்பாவாக ஆசைப்பட்டால் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?! வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டு அதை அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? அதோடு 44 வயது வரை கரண் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்? என்பது குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என அஸ்மி மீடியா முன்னிலையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வாடகைத் தாய் மூலமாக ஒரு ஆண்குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அதற்கு ‘ஆப்ராம்’ எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் தன்னைப் போலவே கரணும் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்ட போது ‘இதே போன்றதொரு சூழலை தானும் சந்தித்திருப்பதால், தன்னால் இவ்விசயத்தை உரிய வகையில் ஏற்றுக் கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது’ என கரணுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி இருந்தார் ஷாருக்.
கரண் ஜோகரின் இரட்டைக் குழந்தைகளில் ஆண்குழந்தைக்கு, தனது தந்தையின் பெயரை நினைவு கூறும் வகையில் ‘யாஷ்’ எனவும், பெண் குழந்தைக்கு தன் தாய் ஹிரூவின் பெயரை நினைவு கூறும் வகையில் ‘ரூஹீ’ என்றும் கரண் பெயரிட்டுள்ளார்.