சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடுவது தொடர்பாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன் என்று இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் விளக்கமளித்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் மேடையில் பாடக்கூடாது என்று அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்த பிரபல பிண்ண்னிப்பாடகர் எஸ்.பி.பிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக எஸ்.பி.பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இது தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப் குமார் என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நோட்டீஸ் அனுப்பப்படுவது என்பது வழக்கமான நடைமுறைதான். இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி பெற்று, உரிய ராயல்ட்டி தொகை செலுத்தி விட்டு பயன்படுத்திக் கொள்ளுமாறுதான் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு முறைபடுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.
சாதாரணமாக மேடைக் கச்சேரிகள் செய்பவர்களிடமிருந்து ராயல்ட்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதீப்குமார் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.