இலங்கை செல்ல சம்மதித்தது ஏன்? மனம் திறந்தார் ரஜினிகாந்த்

தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தான் இலங்கை செல்ல சம்மதித்தது ஏன்? என்பது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.
இலங்கை செல்ல சம்மதித்தது ஏன்? மனம் திறந்தார் ரஜினிகாந்த்

சென்னை: தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தான் இலங்கை செல்ல சம்மதித்தது ஏன்? என்பது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், நிறுவனம் சார்பில் இலங்கையில் உள்ள வவூன்யாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அளிப்பதற்காக கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்.

வரும் ஏப்ரல் 9ம் தேதி மாலை கிட்டதட்ட மூன்று நான்கு லட்சம்பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்மந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி கொடுபப்தாக திட்டம்.

மறுநாள் வவூனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன்பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தேன். காரியம்... அந்து வீடுகளை திறந்து. காரணம் : காலம் காலமாக வாழ்ந்த தங்களின் பூமிக்காக,தங்களின்இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்துக்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மன்னை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த நடமாடிய இடங்களைப் பார்த்துஅவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களை பார்க்க வேண்டும். மனத் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.

அதுமட்டுமின்றி இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிரிசேனா சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரை பணயம் வைத்து, வேறு எந்த தொழிலுமே தெரியாததனால், கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரை பறித்து,அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் துடிக்கிறது.
அதைப் பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்.

இத்தருணத்தில் மதிப்பிற்குரிய எனது அருமை நண்பர் தொல் திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன் வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.

இச்சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்து விடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com