இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் "டோரா.' இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்கியுள்ளார். தனக்கென தனித்துவம்மிக்க கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த "அனாமிகா', "மாயா' போன்ற படங்களில் படத்தின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் "டோரா' படத்தைப் பொறுத்தவரை நயன்தாராவுக்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஒரு கொலையும், அதைச் சுற்றிய சம்பவங்களும்தான் கதை.
தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது. விவேக் - மெரிவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோரா படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி நெருங்கிவிட்டதால் மறு தணிக்கைக்குச் செல்லாமல் ஏ சான்றிதழோடு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், டோராவுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து ஆச்சர்யமடைந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: டோரா - ஏ சான்றிதழ்; மாநகரம் - யூ/ஏ சான்றிதழ்; துருவங்கள் 16 - யூ/ஏ சான்றிதழ். ஆனால் சில படங்கள் யூ சான்றிதழைப் பரிசாகப் பெற்றுள்ளன. நமது தணிக்கைக் குழுவை நாளுக்கு நாள் மிகவும் விரும்புகிறேன் என்றார்.