தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட 2500 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்ற நடிகை சுகுமாரி 2013-ம் ஆண்டு மார்ச் 26 அன்று மறைந்துபோனார்.
1940-ம் ஆண்டு திருவிதாங்கூரில் பிறந்த சுகுமாரி “ஓர் இரவு” என்ற தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1951-ல் ஆரம்பித்த சுகுமாரியின் திரைப்பட வாழ்க்கை ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீடித்தது. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லலாம். “ஓர் இரவு” படத்துக்குப் பிறகு பொன்னி, கோமதியின் காதலன், ராஜா ராணி, சக்ரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் நடனக்கலைஞராக நடித்துள்ளார்.
அரங்கேற்ற வேளை, அலைபாயுதே, கோபுரவாசலிலே, பம்மல் கே. சம்மந்தம் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே புகழ் பெற்ற இயக்குநர் ஏ. பீம்சிங்கை 1959-ல் திருமணம் செய்தார். 1978-ல் ஏ. பீம்சிங் மறைந்த போது சுகுமாரிக்கு வயது 38.
அதிகப் படங்களில் நடித்ததற்காக கின்னஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மம்முட்டி போன்ற புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பல விருதுகளைப் பெற்றுள்ள சுகுமாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது 2011-ம் ஆண்டிலும், பத்மஸ்ரீ விருது 2003-ம் ஆண்டிலும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
சுகுமாரி மறைந்து நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவருடைய திரைப்படங்கள் என்றென்றும் அவரை நினைவு கூறும்.