மே 19 ஆம் தேதி அன்று வெளியாகும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வாகி இருக்கின்றது
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் 'ஈரோஸ்' தயாரித்து இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம், நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் கவர்ந்துவிடும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்தப் படத்தை 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்த 'காக்கா முட்டை' திரைப்படமும், பல சர்வேதச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்வேதச திரைப்பட விழாக்களில் எளிதில் அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில் எங்களின் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் தேர்வாகி இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நியூயார்க் நகரத்தில் உள்ள 'வில்லேஜ் திரையரங்கில்' வருகின்ற மே 6 ஆம் தேதி அன்று எங்கள் படம் திரையிடப்படுகின்றது. இதன் மூலம், ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக உலகினர் மத்தியிலும் எங்கள் திரைப்படம் நல்லதொரு மரியாதையை பெறும். வருகின்ற மே 19 ஆம் தேதி அன்று நாங்கள் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி.