கார் விபத்தில் தான் இறந்துபோனதாக வெளியான தகவலுக்கு நடிகை ரேகா வி. குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் - பேரணாம்பட்டு அருகே ஏற்பட்ட கார் விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது டிவி நடிகை ரேகா சிந்து உயிரிழந்தார். ஆனால், ரேகா சிந்துவுக்குப் பதிலாக தெய்வமகள் நாடகத்தில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரேகா வி. குமார் இறந்துபோனதாக முதலில் தகவல் வெளிவந்தது. செய்திகளில் அவருடைய புகைப்படமும் வெளியானது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் வழியாக இச்செய்தியை மறுத்தார் ரேகா. அவர் கூறியதாவது: நான் நலமாக உள்ளேன். நான் இறந்ததாக வந்த தகவல் தவறானது. குடும்பத்துடன் சிருங்கேரி கோயிலுக்கு வந்துள்ளேன் என்று கூறினார்.
கன்னட டிவி நடிகை ரேகா சிந்து, படப்பிடிப்புக்காக சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்று காலை 2.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
காரில் ஆறு பேர் இருந்துள்ளார்கள். கார் ஓட்டுநர் தூக்கத்தில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் மேலும் இருவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து குறித்து வேலூர் காவல்துறை விசாரணை செய்துவருகிறது.