சென்னை: ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி-2 திரைப்படம் நிகழத்தி சாதனை புரிந்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி-2. இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த ஹிந்தி படங்களான தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் 'கலெக்ஷன்' சாதனையை 6 நாட்களில் ரூ.750 கோடியை வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க செய்துள்ளது.
தற்பொழுது இந்த படமானது இந்தியாவில் ரூ.800 கோடியும், வெளிநாடுகளில் ரூ.200 கோடியும் வசூல் செய்து உள்ளது. இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இதுவரை சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய வசூல் சாதனைகளை பாகுபலி நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.