பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் 'ரங்கா' படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது.
'இயக்குனர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னை கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் எங்களை அச்சுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும் , காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம். ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதைச் செய்வது தான் நல்லது என எனக்கு தோன்றியது. முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் எல்லாம் படமாக்கி விட்டோம். உடல்ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சிப் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. நாங்கள் சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்தோம் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சிபிராஜ் மற்றும் நிகிலா மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள். மாஸ்டர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினரும் அந்தப் பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது.
இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் ஒரு தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு குழுவினர் மட்டும் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். மற்றவர் எவர் இருந்தாலும் மூட்டை முடிச்சு கட்டி பறந்து போய் இருப்பார்கள் என எங்கள் லொகேஷன் மானேஜர் சொன்னது எங்களை பெருமையில் ஆழ்த்தியது. அந்த உந்துதலே படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்த உதவியது. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது என்றார் ' தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.