சமீபத்தில் இந்தியத் திரைப்பட உலகில் 1000 கோடி ரூபாய் வசூலித்த பாகுபலி திரைப்படம் வாயிலாக உலகம் முழுதும் பிரபலமானவர்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்துக்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகினருக்கு நன்கு அறிமுகமானவரே. தற்போது திரைப்படங்கள் மட்டுமன்றி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது சொந்தத் தயாரிப்பில் நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மற்றும் ஒரே மகனுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணனின் கணவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி. இருவரும் ‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலாகி திருமணம் செய்து கொண்டனர். இடையில் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும், ரம்யா சென்னையிலுமாக வாழ்ந்து வருவது பற்றி பல வதந்திகள் கிளம்பின. ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இருவரும் தனித் தனியே பிரிந்து வாழ்கிறார்கள் என பல விதமாக கிசு கிசுக்கள் பரவின. தற்போது பாகுபலிக்குப் பின் ரம்யாவிற்கான திரைப்பட அங்கீகாரம் வலுப்பட்டுள்ள நிலையில் தனது திருமண வாழ்வு குறித்த வதந்திகளுக்கு மனம் திறந்து பதிலளித்து ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவரது பதிலில் இருந்து;
நானும் எனது கணவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். நான் ஒரு நடிகை, என் வாழ்வில் நான் விரும்பும் வரை தொடர்ந்து நடிக்க விரும்புவது எனது உரிமை. ஒரு நடிகையாக அது எனது கடமையும் கூட. அதை என் கணவர் நன்கு புரிந்து கொண்டார். அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்ற நிலையில் ஹைதராபாத்தில் தங்கி இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். நான் எனது நெடுந்தொடர் மற்றும் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் தடையின்றி கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் என் பெற்றோருடனும், மகனுடனும் வசிக்கிறேன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருவருக்கும் ஒன்றாக விடுமுறை வந்தால் அப்போது குடும்பமாக எங்காவது டூர் செல்கிறோம். தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்பில் தான் இருக்கிறோம். இப்போது நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை. எங்கள் இருவருக்கும் எதிர்காலக் கடமைகள் இருக்கின்றன. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் இருவருமே ஒருவரது வேலையை மற்றவர் புரிந்து கொண்டு மனமுவந்து விட்டுக் கொடுத்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது திருமண வாழ்க்கை முறிந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி. என்றூ ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Image courtsy: google