தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தேசியத் திரைப்பட விருது வரலாற்றில் சண்டைக் கலைஞர்களுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இம்முறை சிறந்த சண்டைக் கலைஞருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. 'புலிமுருகன்' திரைப்படத்துக்காக பீட்டர் ஹெய்னுக்கு அந்த விருது கிடைத்தது. மேலும் 'புலி முருகன்' உள்ளிட்ட 4 படங்களில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற இரு கலைஞர்களும் மீண்டும் கைகோக்க உள்ளார்கள். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் படத்தை பீட்டர் ஹெய்ன் இயக்கவுள்ளார். இத்தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படம் சர்வதேச ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்படுகிறது. எனவே சீனம், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார் பீட்டர் ஹெய்ன். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தப் படம் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.