ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ரசிகர்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்கள் மத்தியில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் பேசினார்.
இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிளம்புயுள்ள நிலையில், தனது ரசிகர் மன்றங்களுக்கு அவர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.