முறையான ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் - பாக்மதி (Bhagmati). தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது. ஜி. அசோக் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயராம், ஆஷா சரத் போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மதி. இசை - தமன். பாகுபலி 2-வின் வெற்றிக்குப் பிறகு இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பாக்மதி, ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பொள்ளாச்சியில் தங்கியுள்ளார் அனுஷ்கா.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டி படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதை வாகனத் தணிக்கை செய்தார்கள் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள். அப்போது கேரவனில் உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவ்வாகனத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வரிபாக்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.