நடிகை கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

கேரள நடிகை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கேரளக் காவல்துறைக்குப் பதிலாக சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என நடிகர் திலீப் கோரிக்கை...
நடிகை கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

கேரள நடிகை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கேரளக் காவல்துறைக்குப் பதிலாக சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என நடிகர் திலீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இரவில் காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். பின்னர் அவரை நடுவழியில் விட்டுவிட்டு அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக அந்த நடிகை அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, திலீப்பை ஜூலை 10-ஆம் தேதி கைது செய்த போலீஸார், அவரை ஆலுவா நகர கிளைச் சிறையில் அடைத்தனர். நடிகையைக் கடத்தி, துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தை திலீப்தான் தீட்டினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி திலீப் நான்கு முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவற்றில் இரண்டு மனுக்கள் அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், இரண்டு மனுக்கள் கேரள உயர் நீதிமன்றத்திலும் தாக்கலாகின. எனினும், நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திலீப், கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம், திலீப்புக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி கூறியதாவது: திலீப்புக்கு எதிரான புலன்விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அவரை இனிமேலும் காவலில் வைத்திருக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். திலீப், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கக் கூடாது. அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் ரூ.1 லட்சத்துக்கான பத்திரத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இதே தொகைக்கான மேலும் இரண்டு உத்தரவாதங்களையும் அவர் அளிக்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அச்சு அல்லது மின்னணு ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டி உள்பட எந்த முறையிலும் திலீப், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார். இதுதொடர்பாக உள்துறைச் செயலாளருக்கு 12 பக்கக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். கேரளக் காவல்துறை அதிகாரிகளால், தான் இந்த வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக திலீப் அக்கடிதத்தில் கூறியுள்ளார். கேரளக் காவல்துறையின் விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை சிபிஐ நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திலீப்பின் இந்த நடவடிக்கை கேரளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com