ஏற்காடு: கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகவுள்ள புதிய த்ரில்லர் வகை படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா தற்பொழுது ஏற்காட்டில் தங்கியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப்படம் 'சாமி'. தற்பொழுது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' உருவாகி வருகிறது.அதில் விக்ரம், கீர்த்தி சுரேசுடன் த்ரிஷாவும் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னால் நடிகை த்ரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக 'சாமி ஸ்கொயர்' படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கத்தில்,கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் 'பரமபத விளையாட்டு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது தொடர்பாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே த்ரிஷா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 'சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பின் காரணமாக இந்தப் படத்திற்கு தேதிகள் அளிக்க இயலாமல் இருந்தார். ஆனால் தற்பொழுது அந்த படத்தில் இருந்து விலகி விட்டதால் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த த்ரில்லர் படத்தில் த்ரிஷாவுடன் நந்தா மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு. முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகனான அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.
சுமார் 15 நாட்கள் ஏற்காட்டில் நடைபெற உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது சுமார் 200 வருடங்கள் பழமையான பங்களா ஒன்றில் நடைபெறவுள்ளது. இந்த பங்களாவனது இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி ராபர்ட் கிளைவின் கோடை வாழிடமாக இருந்தது என்று கூறப்படுகிறது.