சித்தார்த் நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘அவள்’. ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. இத்திரைப்படம் க்ருஹம் என்ற பெயரில் தெலுங்கிலும், தி கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்ற பெயரில் இந்தியிலும் வெளியாகியுள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் மிலிந்த் ராவ் இருவரும் இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரிந்தனர். இன்று வரை தொடரும் அந்த நட்பு ‘அவள்’ திரைப்படம் மூலம் மிலிந்த் ராவின் திறமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
‘அவள்’ குறித்து சித்தார்த் கூறுகையில், ‘நிஜ வாழ்க்கையில் நாங்கள் கண்டும், கேட்டும், திகிலாக உணர்ந்த சில சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான் ‘அவள்’. ஹாரர் ஜானர் எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். இந்திய சினிமாவில் அச்சத்தில் உறைய வைக்கும் அளவுக்கு பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற குறை எனக்கு உண்டு. அந்தக் குறையை ஓரளவுக்காக போக்கத்தான் நானும் மிலிந்த் ராவும் ‘அவள்’ படத்தை எடுக்க முடிவெடுத்தோம்.
இந்தக் கதையை நாங்க எழுதும் போது ஹாரர் படங்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்தோம். அதைப் பற்றிய மக்களின் பார்வை என்னவென்றும் தெரிந்து கொண்டோம். இந்தக் கதையை உருவாக்க நிறைய காலம் எடுத்துக் கொண்டோம். ஆங்கில திகில் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ்ப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பிறந்த படம் தான் ‘அவள்’. திரை அரங்குக்குச் சென்று அவளைப் பார்த்தால் கண்டிப்பாகப் பயம் ஏற்படும்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவருடைய சவுண்ட் டிசைனரான ரிச்சர்ட் கிங், அவள் படத்தின் ஒலியமைப்பைப் பாராட்டியுள்ளார். இது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்’ என்று தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் சித்தார்த்.