எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. நடிகர் வீராவை நமீதா திருமணம் செய்யவுள்ளார்.
நடிகர் வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நானும் வீராவும் நவம்பர் 24 அன்று திருப்பதியில் திருமணம் செய்யவிருப்பதை அனைவரும் இந்நேரம் அறிந்திருப்பீர்கள். வீரா என்னுடைய சிறந்த நண்பர். ஒரு தயாரிப்பாளரும் வளரும் நடிகராகவும் உள்ளார். இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்.
கடந்த வருட செப்டம்பர் மாதம் எங்களுடைய சிறந்த நண்பரான சஷிதர் பாபுவால் நாங்களும் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். சிறிது சிறிதாக நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
கடந்த செப்டம்பர் 6 அன்று கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்த வீரா, காதல் உணர்வுமிக்க கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார். நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் உடனே சம்மதம் சொன்னதற்குக் காரணம், இருவருக்கும் ஒரே லட்சியம், ஒரே ஆன்மிக உணர்வு இருந்ததுதான். பயணம், விலங்குகள் மீதான அன்பு என இருவருக்கும் ஒரே ஆர்வங்கள். இருவரும் வாழ்க்கை மீது அதீத பிரியம் கொண்டவர்கள்.
என்னை முக்கிய நபராக எண்ணும் ஒருவருடன் இணையவுள்ளேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். கடந்த 3 மாதங்களில் நான் அவரை எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறேனோ அந்தளவுக்கு அதிர்ஷ்டம் கொண்டவளாக எண்ணிக்கொள்கிறேன். அவர் வெளிப்படுத்தும் அக்கறை, ஆதரவினால் ஆண்கள் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் அனைவருடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.