இயக்குநர் நலன் குமாரசாமி-சரண்யா திருமணம் நேற்று (9.11.2017) வியாழக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான இயக்குநர் நலன் குமாரசாமி 'சூது கவ்வும்' படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக முத்திரை பதித்தார். இந்தப் படத்தின் வித்யாசமான கதை சொல்லல் முறையும், விஜய் சேதுபதியின் நடிப்பும் திரை ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
அடுத்து அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியான 'காதலும் கடந்து போகும்' திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
சமீபத்தில் அவரது உறவினரான சரண்யாவுக்கும் நலனுக்கும் அவர்கள் குடும்பப் பெரியவர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று திருச்சி வாசவி மஹாலில் நலன் குமாரசாமிக்கும், சரண்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முந்தைய நாளில் நண்பர்களுக்கு பாச்சிலர் பார்ட்டி கொடுத்தார் நலன் குமாரசாமி. அவர் திருமணத்துக்காக உடல் எடையைக் குறைத்துள்ளார் என்றனர் அவரது நண்பர்கள்.
நலன்-சரண்யா திருமணத்துக்கு பிரபல நடிகர்கள் பார்த்திபன், சமுத்திரக்கனி, கருணாகரன், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர். அவரது நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதியும் திருமணத்தில் கலந்து தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.