சென்னை: தற்பொழுது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ள படம் 'அறம்'. மாவட்ட ஆட்சித்தலைவராக மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டினைப் பெற்றிருப்பதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
பலதரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தினை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த பதிவில் , '#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்' என்று தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தினைப் பொறுத்த வரை இயக்குநர்தான் முக்கியமானவர். ஆனால் ரஞ்சித் தன்னுடைய இந்தப்பதிவில் அறம் இயக்குனர் கோபி நயினார் பெயரைக் கூட குறிப்பிடாமல், நடிகை நயன்தாரவை 'தோழர் நயன்தாரா' என்று விளித்திருப்பது பலத்த சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரஞ்சித்துக்கு எதிரான கண்டங்கள் பதியப்பட்டு வருகின்றன.
முன்னதாக இயக்குநர் ரஞ்சித்தின் இரண்டாவது படமான 'மெட்ராஸ்' திரைப்படத்தின் சில காட்சிகள், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நின்று போன 'கறுப்பர் நகரம்' என்ற படத்தின் காட்சிகள்தான் என்ற சர்ச்சை உருவாகி, இது தொடர்பாக அப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து செய்யுமளவுக்கு நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னுடைய இந்த ட்வீட்டின் மூலம் மீண்டும் சர்ச்சையை பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.